Friday, January 14, 2011

Повесть о том, как один мужик двух генералов прокормил : எப்படி ஒரு பாமரன் இரண்டு அரசு ஊழியர்களுக்குச் சோறு போட்டான்?



மூலம் : மிக்ஹில்  எவ்க்ரபோவிச்  சல்ட்டிகோவ் -ஷ்செட்ரின் 
தமிழில் : மா. புகழேந்தி 


முன்னொரு காலத்தில் இரண்டு அரசு ஊழியர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் மரமண்டைகள், ஒரு நாள் திடீரென  யாருமே இல்லாத ஒரு தீவுக்குள் எதோ மாயக் கம்பளத்தில் சென்றது போல் கொண்டு விடப்பட்டனர்.

அவர்கள் தங்களது முழு வாழ்க்கையையும் பதிவேடுகள் பேணப்பட்ட ஒரு அரசு அலுவலகத்திலேயே கழித்து இருந்தனர். அங்கேயே உண்டு உறங்கி வளர்ந்து வயதாகி வாழ்க்கையை ஓட்டி வந்தனர், அவர்களுக்கு அந்தத் துறையைத் தவிர உலகத்தில் ஒன்றுமே தெரியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம், "அய்யா, தங்களின் மேலான கவனத்துக்குப் பணிந்தனுப்பப் படுகிறது....."

ஆனால் அவர்களது துறை ஒருநாள் ஒழிக்கப்பட்டது, அவர்களது சேவை இனித் தேவை இல்லை என்று சொல்லி சுதந்திரமாக விடப் பட்டனர். ஒய்வு பெற்ற இருவரும் செயின்ட் பீடர்ச்பர்க்கில் உள்ள போத்யாசெச்கைய வீதிக்குக் குடிபெயர்ந்தனர். ஒவ்வொருவருக்கும் வீடும் சமையல்காரனும் ஓய்வூதியமும் இருந்தது.

ஆளில்லாத் தீவில் விழித்துப் பார்த்தபோது இருவரும் ஒரே இடத்தில் இருப்பது தெரிந்தது. முதலில் அவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை, எதுவுமே நடவாதது போல் இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

"அய்யா, என்ன ஆச்சரியப் படும்படியான கனவு", ஓர்  ஊழியர் சொன்னார், "நான் எதோ ஒரு ஆளில்லாத் தீவில் இருப்பதாகக் கனவு கண்டேன்."  இதைச் சொல்லி முடிப்பதற்குள் துள்ளி எழுந்தார். இன்னொருவரும் அப்படியே குதித்து எழுந்தார்.

"கடவுளே இதுக்கு என்ன அர்த்தம், நாம எங்கே இருக்கிறோம்? " , அவர்கள் திகைத்துப் போய்க்  கூச்சலிட்டனர்.

அவர்கள் இருவரும் அது கனவல்ல என்பதற்காகத் தங்களைக்  கிள்ளிப் பார்த்துக் கொண்டனர். பிறகு அந்த சோகமான உண்மையை உணர்ந்து கொண்டனர்.

அவர்கள் முன்னால் பெருங்கடல் விரிந்து இருந்தது, பின்னால் சிறு நிலப் பரப்பு இருந்தது, அதற்கும் பின்னால் மீண்டும் பெருங்கடல். அவர்கள் அழ ஆரம்பித்தனர் -- அவர்களது துறை கலைக்கப்பட்ட பின் முதன்முறையாக. 

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இருவரும் இரவு உடையிலேயே இருப்பதை அறிந்தனர். 

"இந்நேரம் நாம காப்பி குடிச்சுகிட்டு இருக்கணும்" , ஒருவர் சொன்னார். மீண்டும் அந்த எதிர்பாராத சூழ்நிலையை எண்ணி இரண்டாவது முறையாக விம்மினார். 

"நாம இப்ப என்ன செய்யிறது?" தேம்பியபடி கேட்டார் ஒருவர், "ஒரு அறிக்கை அனுப்பினாலும் அதனால என்ன நடந்துவிடும்?" 

"அய்யா உங்களுக்கு ஏதாவது தெரியுமா? " இன்னொருவர் கேட்டார், "நீங்கள் கிழக்குப் பக்கமாகப் போங்கள், நான் மேற்குப் பக்கமாகப் போகிறேன், மாலையில் திரும்பி இங்கே வரலாம், ஏதேனும் இருவரும் கண்டுபிடிச்சு இருப்போம்." 

கிழக்கு எது மேற்கு எது என்று கண்டறிய முற்பட்டார்கள். அவர்களது துறைத் தலைவர் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வந்தது, "கிழக்கு எது என்று தெரியணும்னா உங்களது முகத்தை வடக்குப் பக்கமாகத் திருப்புங்கள், உங்களது வலது புறம் இப்போ இருப்பது தான் கிழக்கு." ஆனால் எது வடக்கு என்று அறிய முடியாமல் வலது புறமும் இடது புறமும் திரும்பினார்கள் அறிய முடியாமல் எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டு நின்றனர்.

அரசு அலுவலகத்தில் பதிவேடுகளுடனேயே தங்களது வாழ்க்கையைக் கழித்து விட்டதால் அவர்களது முயற்சி அனைத்தும் தற்போது வீணானது.

"அய்யா எனக்கு என்ன தோணுதுன்னா நீங்க வலது பக்கமாகப் போங்கள் நான் இடது பக்கமாகப் போகிறேன். " , ஒருவர் சொன்னார். அவர் அந்தத்துறையில் மட்டுமல்லாமலும் முன்பு ஒரு பள்ளியில் கையெழுத்து பயிற்று விக்கும்  ஆசிரியராகவும் பணியாற்றி இருந்தார், இன்னொருவரிடம் இருப்பதை  விடப் புத்திசாலித் தனம் கூடுதலாகவும் தெரிந்தது.

சொன்னது போலவே செய்தார்கள். ஒருவர் வலது புறம் சென்றார். கனிகள் நிறைந்திருந்த மரங்களைக் கண்டார். மகிழ்ச்சியாக ஆப்பிளைப் பிடுங்க முயன்றார், ஆனால் அவைகள் மிக உயரத்தில் இருந்தன, மரத்தின் மேல் ஏறித்தான் பறிக்க வேண்டும். அவரது முயற்சி பலிக்கவில்லை. அவரால் அவரது இரவு உடையைக் கிழிக்க மட்டுமே முடிந்தது. கீழே ஓடிக்கொண்டு இருந்த நீரோடையில் விழுந்தார். அது மீன்களால் நிறைந்து இருந்தது. 

"போத்யாசெச்கா வீதியில் இதெல்லாம் இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்", நினைத்துப் பார்த்தார், வாயில் எச்சில் ஊறியது. பின் காட்டுக்குள் சென்றார், அங்கே காட்டுக் கோழிகள், குழி முயல்கள் காட்டுப் பறவைகள் எல்லாம் கண்டார். 

"கடவுளே எவ்வளவு சாப்பிடுவதற்கு இருக்கு", கத்தினார். அவரது பசி மிகவும் அதிகமானது.

ஆனால் வெறுங்கையுடன் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பினார். அடுத்தவர் இவருக்கும் முன்னரே அங்கு காத்திருந்தார்.

"அய்யா எப்படி இருந்தது? ஏதாவது கொண்டு வந்தீங்களா?"

"மாஸ்க்கோ கெசட் பழைய பேப்பரைத் தவிர ஒன்னும் இல்லை."

இருவரும் கீழே படுத்து உறங்க ஆரம்பித்தார்கள். அவர்களது வெறும்  வயிறு அதை அனுமதிக்கவில்லை. அவர்களது பாதித் தூக்கத்தை தங்களது ஓய்வூதியத்தை யார்  வாங்குகிறார்களோ என்ற கவலையும் மீதித் தூக்கத்தை பகலில் கண்ட கனிகள், மீன்கள், காட்டுக் கோழிகள், குழி முயல்கள் பற்றிய நினைவுகளும் கெடுத்துக் கொண்டிருந்தது.

மனிதனுக்குத் தேவையான உணவுகள்  பறக்கிறது நீந்துகிறது மரங்களில் காய்த்துக் குலுங்குகிறது. அய்யா, யார் இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தார்கள்?", ஒருவர் சொன்னார். "உண்மையைச் சொல்லனும்னா நான் கூட காலை உணவுகள் மேசையின் மேல் திடீரென்று தோன்றுகிறது என்றுதான் நினைத்துக் கொண்டு இருந்தேன்", இன்னொருவர் சொன்னார்.

"நாம தெரிஞ்சுக்க வேண்டியது என்னன்னா கோழியைச் சாப்பிடவேணும்னா முதல்ல அதைப் பிடிக்கணும், கொல்லனும், பொங்கு பொசுக்கனும், அப்புறம் சமைக்கணும் . ஆனால் அதை எல்லாம் எப்படிச் செய்யிறது?" 

"ஆமாம், எப்படி அதையெல்லாம் செய்யிறது?", திருப்பிக் கேட்டார் இன்னொருவர்.

அமைதியானார்கள், பின் தூங்கிப் போனார்கள், இருப்பினும் பசி அவர்களது தூக்கத்தை  விரட்டியது. அவர்களது கண் முன்னே சுவையாகச் சமைக்கப்பட்ட கோழிகள், வாத்துக்கள் ஆகியவை ஊறுகாய்களுடனும்  ஆலிவ் எண்ணெய்யுடனும் அழகாக அலங்கரிக்கப்பட்டுத் தெரிந்தது.

"என் காலணிகளை நானே சாப்பிட்டு விடுவேன் போல் இருக்கு" , ஓர்  ஊழியர் சொன்னார்.

"அதொண்ணும் மோசமில்லை மென்மையான கை உறைகளையும்  கூடச் சாப்பிடலாம்", இன்னொருவர் சொன்னார்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

அவர்களது பார்வையில் பேய்த்தனம் மின்னியது, பற்கள் அடித்துக் கொண்டன, நெஞ்சிலிருந்து பரிதாபமான ஒலி வெளிப்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர்  பற்றிக் கொண்டனர், இருவரும் அச்சமடையக் கூடிய பைத்தியக் காரத்தனமான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டனர். அங்கு முக்கலும் முனகலுமான ஒலி கேட்டது. கை எழுத்து ஆசிரியராக இருந்த அரசு ஊழியர் தனது சகாவினைக் கடித்துக் கொண்டிருந்தார். அங்கே வழிந்த ரத்தம் இருவரையும் நினைவுக்குக் கொண்டு வந்தது.

"கடவுளே காப்பாத்துங்க", ஒரு சேரக் கூச்சலிட்டனர், "நாங்க ஒருத்தரை ஒருத்தர் சாப்பிட்டிருவம் போல இருக்குதே. ஐயோ எப்படி இப்படி நடந்தது? எந்தப் பேய் எங்களுக்குள்ளே புகுந்தது?"

"ஐயோ ஒருத்தருக்கொருத்தர் வேடிக்கை காட்டி நேரம் போக்கணும் போல இருக்கே. இல்லாட்டி இங்கே கொலையும் சாவும் விழுந்திடும்  போல இருக்கே . " , ஓர் அரசு ஊழியர் சொன்னார்.

"நீங்க ஆரம்பிக்கலாம்", இன்னொருவர் சொன்னார்.

"உங்களால சொல்ல முடியுமா? ஏன் சூரியன் உதிச்ச பிறகு மறையுதுன்னு? மறைஞ்ச பிறகு உதிக்க வேண்டியது தானே?"

"வேடிக்கை காட்டாதீங்க. முதல்ல நீங்க தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறீங்க அப்புறம் புறப்பட்டு ஆபீஸ் போறீங்க வேலை செய்யுறீங்க, பிற்பாடு ராத்திரி வந்து தூங்கப் போறீங்க."

"ஏன் வேற மாதிரி சிந்திக்கக் கூடாது? முதல்ல தூங்கப் போறீங்க நல்ல நல்ல கனவாக் காணுறீங்க, அப்புறம் எழுந்துக்குறீங்க."

"ஆமா நல்லது தான். ஆனா நான் வேலைக்குப் போயிட்டு இருந்த போது, இப்படித்தான் நினைச்சேன் , 'இப்ப விடிஞ்சாச்சு , பகல் வந்திடும், அப்புறம் மத்தியானச் சாப்பாடு வந்திடும், அதுக்கப்புறம் கடைசியாத் தூங்கறதுக்கு நேரம் வந்திடும்.'"

'மத்தியானச் சாப்பாடு' என்ற வார்த்தைகள் பகலில் நடந்த நிகழ்வுகளை எல்லாம் மீண்டும் நினைவு படுத்தியது, இருவரையும் சோகத்தில் ஆழ்த்தியது, அவர்களது உரையாடல் அத்துடன் முடிவுக்கு வந்தது.

"என்கிட்டே ஒரு தடவை  டாக்டர் ஒருத்தர் சொல்லி இருக்கார் என்னன்னா மனித உடல்ல சுரக்குற சுரப்புக்களே அவனை ரொம்ப நாளைக்கு வாழ வைக்கும்னு", ஓர்  ஊழியர் மீண்டும் ஆரம்பித்தார்.

"அப்படீன்னா என்ன அர்த்தம்."

"பெருசா ஒண்ணுமில்ல. இங்க பாருங்க ஒரு சுரப்பு சுரந்து, மத்த சுரப்புகளைத் தூண்டி  சுரக்க வைக்கும், அப்படியே அதுகளும் மத்ததைத் தூண்டும், கடைசியா எல்லாச் சுரப்புகளும் உட்கொள்ளப் படும்."

"அதுக்கப்புறம் என்ன நடக்கும்?"

"அதுக்கப்புறம் உணவு வந்து அதனோட பாதையில எடுத்துக்கப்படும் ."

"பிசாசு!"

அவர்கள் எதைப் பற்றி பேச ஆரம்பித்தாலும்  சாப்பிடுவதைப் பற்றியே முடிகிறது, அது அவர்களது பசியை அதிகப் படுத்திக் கொண்டே போனது. அதனால் அவர்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்தனர், பிறகு கண்டெடுக்கப் பட்ட மாஸ்கோ கெசட்டை ஆர்வத்துடன்  படிக்கலானார்கள்.

மேயர் விருந்தளித்தார்

சுமார் நூறு பேருக்கு உணவு மேசை தயார் செய்யப்பட்டு இருந்தது. அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அது விஞ்சி இருந்தது. மிகத் தொலைவில் இருந்த மாகாணங்களில் இருந்து இம் மாபெரும் விருந்துக்கு வந்திருந்தவர்கள் விலை உயர்ந்த பரிசுகளைக் கொண்டு வந்திருந்தனர். ஷேக்ச்னாவிலிருந்து பொன் நிற மீன்களும் காகசீயக் காடுகளில் இருந்து வெள்ளி நிற பீசன்ட் பறவைகளும் நன்கு சமைக்கப்பட்டும் குளிர் காலங்களில் அதிசயமான ஸ்ட்ராபெர்ரிகளும்........"

"ஐயோ போதும் படிக்கிறதை நிறுத்துங்க அய்யா! படிக்கறதுக்கு வேற ஒண்ணுமே  இல்லையா?"  இன்னொரு ஊழியர் பரிதாபமாகக் கத்தினார். தனது சகாவின் கைகளில் இருந்து செய்தித் தாளைப் பிடுங்கி வேறு ஒரு செய்தியைப் படிக்கலானார்.

துலாவில் உள்ள நமது செய்தியாளர் அளித்த தகவல், உபாவில் நேற்று ஒரு ஸ்டர்ஜியான் வகை மீன் பிடிக்கப் பட்டது. (இதற்கு முந்தைய நிகழ்வு இங்குள்ள மிக மூத்தவர்களுக்குக்   கூட நினைவில் இல்லை, குறிப்பிடத்தக்க செய்தி என்ன வென்றால் அவர்கள் இம் மீனில் முன்னாள் காவல் துறை அலுவலரை அடையாளம் கண்டது தான்.) இதனால் அவர்களது சங்கத்தில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டது. விருந்துக்குக் காரணமானதை பெரிய மரத்தட்டில் வைத்து ஊறுகாய்களால்  அலங்கரித்து பரிமாறினார்கள். மீனின் வாயில் கொத்தமல்லித் தழைக் கொத்தினை    வைத்து இருந்தனர். இதைப் பொறித்தெடுத்த டாக்டர் பா.... அனைவருக்கும் இம் மீனின் ஒரு துண்டாவது கிடைக்குமாறு பார்த்துக் கொண்டார். இத்துடன் பரிமாறப் பட்ட தட்டுக்களில் வழக்கத்தை விட சுவையாகவும் மணமாகவும் உணவுகள்......."

"மன்னிக்கணும் அய்யா, எனக்கு என்ன தோணுதுன்னா நீங்க கூட செய்தியைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இல்லைன்னு." , முதல் ஊழியர் இடைமறித்தார், செய்தித்தாளைக் கைப்பற்றி மீண்டும் படிக்க ஆரம்பித்தார். "விடாகாவில் வாழும் மிகவும் வயதான ஒருவர்மீன் சூப் வைப்பதைப் பற்றி புதிய உயர்தரமான முறையைக் கண்டு பிடித்துள்ளார்; உயிருள்ள ஒரு காட் மீனை அதன் ஈரல், கோபத்தால் பொங்கும் அளவுக்கு இரும்புக் கழியால் அடித்து...."

ஊழியர்களின் தலை சோகத்தில் தாழ்ந்தது.  அவர்களது பார்வை  எங்கெல்லாம் விழுந்ததோ அங்கெல்லாம் சாப்பிடுவது தொடர்பான தகவல்களே இருந்தன. அவர்களது சிந்தனைகளோ அபாயகரமாக இருந்தது. உணவு தொடர்பான எந்த ஒரு சிந்தனையிலிருந்தும் தங்களது மனத்தைக் கட்டுப் படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை, அவர்களது ஆசையை நிறுத்திக் கொள்ள முடியவில்லை     சாப்பிடவேண்டும் என்ற ஏக்கம் தடுக்க முடியாத வேகத்தில் திரும்பியது .

முன்பு கையெழுத்து ஆசிரியராக இருந்த ஊழியருக்கு திடீரென புத்துணர்ச்சி தோன்றியது.

"நான் கண்டு புடிச்சிட்டேன்!", சந்தோசத்தில் கத்தினார், "இதுக்கு என்ன சொல்லப் போறீங்க, அய்யா? நாம் ஏன் ஒரு இளிச்சவாயனைக்  கண்டு பிடிக்கக் கூடாது?"
"இளிச்சவாயன் , அய்யா. எந்த மாதிரி?"
"சாதாரணமான இளிச்சவாயன்  தான். பாமரன், எல்லோரையும்  போல. அவன் நமக்கு காலை உணவு செஞ்சு கொடுப்பான், நமக்காக காட்டுக் கோழிகளையும் மீன்களையும் பிடிச்சிட்டு வருவான்."
"ம்ம் சரி. எங்க போய் அவனைத் தேடுறது? யாருமே இங்கில்லாத போது."
"ஏன் இங்கில்லை? பாமரன்கள் எல்லா இடத்திலையும் இருக்காங்க. ஆனா அவுங்களைத் தேடிக்கண்டு புடிக்கணும். இங்க நிச்சயமா ஒருத்தன் வேலைக்குப் போகாம ஒளிஞ்சுகிட்டு  இருப்பான்.

இந்தத் திட்டம் அவர்களுக்கு உற்சாகத்தைக்  கொடுத்தது உடனே குதித்தெழுந்து பாமரனைத் தேடத் தொடங்கினர்.

நீண்ட நேரத்திற்கு  அவர்கள் அந்தத் தீவு முழுக்க அலைந்து திருந்தார்கள், தேவைப் பட்டது எதுவும் கிடைக்க வில்லை, கடைசியாக ஓரிடத்தில் கருப்பு ரொட்டி மணமும், பழைய ஆட்டுத்தோலின் வாசமும், காற்றில் மிதந்து வந்து அவர்களது மூக்கைத் துளைத்துதான் வந்த திசையில் அவர்களை இழுத்தது. அங்கே ஒரு மரத்தடியில் தடித்த உருவம் கொண்ட பாமரன் போல் தெரிந்த ஒருவன் தலைக்கடியில் கைகளை வைத்து, ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். வேலை செய்வதற்கு சங்கடப்பட்டு தைரியமாக வெட்கமேயில்லாமல் இந்தத் தீவில் அவன் ஒளிந்து கொண்டிருக்கிறான், என்பது தெளிவானது. ஊழியர்களது ஆத்திரம் எல்லை கடந்தது.

"என்ன சோம்பேறி இவன்! இங்க வந்து தூங்கீட்டு இருக்கே", அவனை அதட்டி எழுப்பினர், "வேலை செய்யறதுக்கு ஒன்னும் இல்லையா? இங்க ரெண்டு பேர் பசியால துடிச்சிட்டு இருக்கோம், நீ பாட்டுக்குத் தூங்கிகிட்டு இருக்கே. எழுந்திரு, எழுந்திரு."

அவன் எழுந்து தன முன்னே நிற்கும் இரண்டு பேரையும் பார்த்தான், அவனுக்கு முதலில் அங்கிருந்து ஓடி விட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றியது, ஆனால் இரண்டு ஊழியர்களும் அவனைப் பிடித்துக் கொண்டனர்.

அவன் விதியை நொந்து கொண்டு வேலை செய்ய வேண்டி வந்தது.

முதலில் மரத்தின் மேல் ஏறி ஊழியர்களுக்கு நன்கு  பழுத்த பல ஆப்பிள்களைப்  பிடுங்கிப் போட்டான். தனக்கு அழுகிய ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டான். பிறகு குழி தோண்டி உருளைக் கிழங்குகளைக் கொண்டு வந்தான். பிறகு இரண்டு கழிகளை உராய்த்து நெருப்பு மூட்டினான். தனது சொந்த முடியில் ஒரு கண்ணி செய்து காட்டுக் கோழிகளைப் பிடித்தான். நெருப்பில் வாட்டியும் சுட்டும் பல வகையான உணவுகளைத் தயார் செய்தான். ஊழியர்கள் இருவரின் மனதில் இந்த சோம்பேறிக்கு எதுவும்  சப்பிடக்கொடுக்கக் கூடாது  என்ற எண்ணம் தோன்றியது.

அவனது வேலையைக் கண்ணுற்ற ஊழியர்கள் மனதுக்குள் மகிழ்ந்தனர். அவர்கள் இதற்கு முன்னர்  பசியால் வாடியதை ஏற்கனவே மறந்து போனார்கள், இப்போது நினைத்துக் கொண்டார்கள், " அரசு ஊழியராக இருப்பதில் என்ன நன்மை என்று பாருங்கள். அவர்களுக்கு எந்தக் கெடுதலும் நடக்காது."

"உங்களுக்குத் திருப்தியா?" , அவன் கேட்டான்.
"உன் வேலையைப் பாராட்டுகிறோம்", அரசு ஊழியர்கள் சொன்னார்கள்.

"என்னைக் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க அனுமதிப்பீங்களா?"

"தாராளமாப் போ போய் ஓய்வெடு, ஆனா அதுக்கு முந்தி நீ ஒரு கயிறு தயாரிச்சுக் கொடுக்கணும்."

அவன் காட்டில் கிடைத்த செடி கொடிகளை தட்டித் தட்டி கட்டிக் கட்டி அன்று மாலைக்குள்  தடித்த கயிறு ஒன்றினைச் செய்து கொடுத்தான். அரசு ஊழியர்கள் அந்தக் கயிற்றில் அவனை ஓடி  விடாமல் இருக்க ஒரு மரத்தோடு கட்டி வைத்தனர். பின்னர் தூங்கச் சென்றனர்.

அப்படி ஒவ்வொரு நாளாகக் கழிந்தது, அவனும் தன் வெறுங்கையாலேயே நன்கு சமைக்கப் பழகிக் கொண்டான். அரசு ஊழியர்கள் நன்கு கொழுத்து மகிழ்ச்சியாக இருந்தார்கள். அவர்களது மகிழ்ச்சி பெருகியது. தங்களது ஓய்வூதியம் செயின்ட் பீடர்ச்பர்கில் தங்களது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆனால் ஒரு காசு கூட செலவாகவில்லை.

"அய்யா உங்களது கருத்து என்ன", காலை உணவு முடித்த கையோடு ஓர் ஊழியர் கேட்டார். "பேபெல் கோபுரம் பற்றிய கதை உண்மையா? அது வெறும் கற்பனைன்னு நீங்க நினைக்குறீங்களா?"

'அப்படியில்லை அய்யா, அது உண்மையா நடந்திருக்குமுன்னு நினைக்கிறேன்.

"உலகத்துல  பல வேறு மொழிகள் இருக்குறதுக்குக் என்ன காரணம் ?"

"வெள்ளங்கள் கூட நிச்சயமாத்  தோன்றி இருக்கு."

"வரலாற்றுக்கு முற்பட்ட, பைபிளில் சொல்லப்பட்ட டிலுவியன் காலத்துக்கு முற்பட்ட விலங்குகளைப் பற்றி நீங்கள் விளக்க முடியுமா? அத விடுங்க... மாஸ்கோ கெசட் என்ன சொல்லுதுன்னா...." நிழலில் அமர்ந்து மாஸ்கோ கெசட்டின் தாட்களை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை  படித்து முடித்தார்கள். மாஸ்கோ, துலா, பென்சா மற்றும் ரியாசான் நகரங்களில் நடந்த விழாக்களைப் பற்றிப் படித்தார்கள், அங்கு பரிமாறப் பட்ட உணவு வகைகளை எந்தச் சிரமமுமின்றிப் படித்தார்கள்.

எவ்வளவு நாட்கள் இப்படி வாழ்ந்தார்கள் என்று கணக்கிட முடியாது. இது அவர்களுக்கு சலிப்பூட்ட ஆரம்பித்தது. செயின்ட் பீடர்ச்பர்கில் இருக்கும் தங்களது சமையல் காரனை அடிக்கடி நினைத்துக் கொண்டனர் , ரகசியமாய்க் கண்ணீர் விட்டனர்.

'அய்யா நான் நினைக்கிறேன்  போத்யாசெச்காயா வீதி  இந்நேரம் எப்படி இருக்கும்?" , ஒரு அரசு ஊழியர் இன்னொருவரைப் பார்த்துக் கேட்டார்.

'ஐயோ அதப் பத்திப் பேசாதீங்க. நான் ஏற்கனவே வீட்டு நினைப்பாவே இருக்கேன்."

"இங்க இருக்குறது நல்லாத் தான் இருக்கு. இந்த இடத்துல ஒரு குறையும் இல்ல. ஆனாலும் ஆட்டுக்குட்டிக்குத் தாய் நினைப்பாவே இருக்கு. அழகான சீருடையும் நினைக்கப் பாவமா இருக்கு."

'ஆமாம் உண்மை தான் நான்காம் நிலை சீருடை வேடிக்கையல்ல. அதில் இருக்கும் தங்க நிற வேலைப்பாடு மட்டும் போதும் ஒருத்தனையும் யோசிக்க விடாது."

இப்போது அவர்கள் பாமரனை எப்படியாவது போத்யாசெச்காயா வீதியில் தங்களைக் கொண்டுபோய் விடு என்று நச்சரிக்கத் தொடங்கினர், என்ன ஆச்சரியம் என்றால், அந்தக் பாமரனுக்கு  போத்யாசெச்காயா வீதியைப் பற்றிக் கூடத் தெரிந்து இருந்தது. ஒரு முறை அவன் அங்கு பீரையும் மதுவையும் வரை முறை இல்லாமல் குடித்தான், குடிகாரர்கள் சொல்வது போல் அவன் வாய்க்குள் போகாமல் தாடி வழியாக  அது  வழிந்தோடியது.

அரசு  ஊழியர்கள் மகிழ்ந்து போய்ச் சொன்னார்கள், " நாங்கள் போத்யாசெச்காயா வீதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள்"

"நானும் அது போல் ஒருவன். உங்களுக்கு ஞாபகம் இருக்கா? கூரையில் இருந்து தொங்கும் கயிறில் தொங்கியபடி சுவர்களுக்கு வெள்ளை அடித்துக் கொண்டு இருப்பேன். கூரைகளில் தவழ்ந்து கொண்டு வேலைகள் செய்வேன், அப்படிப் பட்டவனாக்கும் நான்" , என்று சொன்னான் பாமரன்.

தன்னுடன் கருணையுடன் நடந்து கொள்ளும் அரசு ஊழியர்களை எப்படி இன்னும் மகிழ்விப்பது என்று பாமரன் மனத்தில் அசை   போட்டான் .
சோம்பேறிகள், இது வரை அவனுடைய வேலையைக் கடிந்து கொள்ள வில்லை குற்றம் சொல்லவில்லை .

மெய்யாலுமே அவன் வெற்றிகரமாக ஒரு கப்பலைக் கட்டி முடித்தான். அது கப்பலென்று  சொல்ல முடியாவிட்டாலும் கூட ஒரு மிதவையாக இருந்தது. அது அவர்களை கடலில் மிதந்து போத்யாசெச்காயா வீதிக்குக் கொண்டு செல்லும் அளவுக்கு தகுந்ததாக இருந்தது.

"பாத்துப் போ, நாயே , எங்களை மூழ்க விட்டுறாதே ", மிதவை அலைகளால் அலைக்கழிக்கப் பட்டு மேலும் கீழும் அசைந்த போது அரசு ஊழியர்கள் சத்தம் போட்டனர்.

"கவலைப் படாதீங்க. எங்களை மாதிரி பாமரங்க இந்த மாதிரி வேலையெல்லாம்   நல்லா செய்து பழகி இருப்போம்." ,

பயணத்துக்குத் தேவையான எல்லா வேலையையும் செய்தான் பாமரன்.

நீரில் நீந்திய நீர்ப்பறவைகளைப் பிடித்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அரசு ஊழியர்களுக்கு சமைத்துப் போட்டான். பிறகு துடுப்புப் போட்டு மிதவையை ஓட்டலானான்.

 வரும் வழியில் அரசு ஊழியர்கள் அச்சப் பட்டதையோ, புயலால் மிதவை பாதிக்கப்  பட்டு மிதவை கவிழப் போனபோது ஒன்றுமே செய்யாதிருந்த முரட்டு பாமரனைக்  கண்டபடி திட்டியதையோ, சொல்லவோ விளக்கவோ முடியாது. இருந்தாலும் பாமரன் துடுப்புப் போடுவதிலும் கடல் மேல்தள மீன்களைப் பிடித்து அவர்களுக்கு சமைத்துப் போடுவதிலும் கண்ணும் கருத்துமாய் இருந்தான். கடைசியாக அவர்கள் கரையைக் கண்டார்கள். சிறிது நேரத்தில் புகழ்பெற்ற கேதரின் கால்வாயை அடைந்தார்கள்.  என்ன சந்தோசம், அவர்கள் கடைசியாக போத்யா செஸ்காயா வீதியினையும் அடைந்தார்கள். நன்கு உண்டு கொழுத்திருந்த அரசு ஊழியர்களான தங்களது எஜமானர்களைப் பார்த்த போது சமையல் காரர்கள் மனதுக்குள் மகிழ்ந்தார்கள்.

அரசு ஊழியர்கள் பிறகு காப்பி குடித்தார்கள் ரொட்டி தின்றார்கள், பிறகு சீருடை அணிந்து ஓய்வூதியம் பெறக் கருவூலம் போனார்கள். எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்பது தனிக் கதை சொல்லவோ விளக்கவோ முடியாது. பாமரனை  மறந்ததையும் சொல்லமுடியாது. இருந்தாலும் அவர்கள் அவனுக்கு ஒரு குவளை விஸ்கியும் ஐந்து கொபெக்கும் கொடுத்தார்கள். பாமரன் மகிழ்ந்து போனான்.

******

5 comments:

  1. நீண்ட வருடங்களுக்கு பிறகு ஒரு ரஷ்ய சிறுகதை.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. மிகச் சிறப்பான ஒரு சிறுகதை. இடுகைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. திரு. மயில்சாமி அவர்கள் தான் எழுதிய கருத்துரையைத் தானே நீக்கி விட்டார். அதற்காக நான் வருத்தப் படுகிறேன். நீங்கள் முரண்பட்டுக் கருத்துக்களை உரைத்தாலும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எனக்கும் இதைப் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் என்று நினைக்கிறேன். தயவு செய்து மீண்டும் உங்கள் கருத்துரையினை இடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete